கடவுள் வாழ்த்து
"திகடச் சக்கர செம்முகம் ஐந்துளான்
சகடச் சக்கர தாமரை நாயகன்
அகடச் சக்கர விண்மணி யாவுறை
விகடச் சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்'
பாரதம்
போற்றும் இரு இதிகாசங்களுள் ஒன்று மகாபாரதம், இன்னொன்று இராமாயணம் இது
அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், உண்மையில் சிலர் இந்த இதிகாசங்களைக் கற்பனை
கதை என்று நினைக்கின்றனர். ஆனால், அது தான் இல்லை. "இதி" என்றால் "இப்படி"
என்று பொருள். "காசம்" என்றால் "நடந்தது" என்று பொருள். அதாவது "இதிகாசம்"
என்றால் "இப்படி நடந்தது" என்று தான் பொருள். மொத்தத்தில் இந்த இதிகாசமும்
ஒரு வரலாறு தான். முன்பு நடந்த ஒரு சம்பவம் தானே வரலாறாக முடியும்?
அப்போது இந்த மகாபாரதக் கதையும் ஒரு வரலாறு தானே!
பொதுவாக
"இதிகாசங்களும்", "புராணங்களும்" தான் இந்து மதத்தின் முதுகெலும்பாக
உள்ளது. இந்த இரண்டிற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளது. உண்மையில்
"புராணம்" என்பது, ஒரு சம்பவம் நடந்து முடிந்து பல யுகங்கள் கழித்து
முனிவர்கள் தம் ஞானக் கண் கொண்டு அதனை ஓலைச்சுவடியில் எழுதுவது ஆகும்.
ஆனால், இதிகாசம் என்பது அப்படி அல்ல, அந்த சம்பவம் நடந்து கொண்டு இருக்கும்
பொழுதே எழுதப்படுவது. உதாரணமாக இராமயணத்தை (இராம - இராமன் ; அயனம் - பாதை.
இராமனின் பாதை) வால்மீகி மகரிஷி, ஸ்ரீ இராமர் வாழ்ந்த காலத்திலேயே
எழுதினார். அதுபோல, மகாபாரதத்தை வேதவியாசர், பாண்டவர்களின் மூத்த சகோதரனான
யுதிஷ்டிரன் வாழ்ந்த காலத்திலேயே எழுதினார். ஆக, இதில் நீங்கள் காணப்போகும்
அனைத்தும் இந்த பாரத கண்டத்தில் முன்னொரு காலத்தில் நடந்தவைகளே!