இறுதிக் காட்சி, யூதனும், சமாரியனும் காட்டு வழியில் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். யூதன் குற்றுயிராய்க் கிடந்த அதே இடம். அங்கு, மத குருவும், லேவியனும், சில யூதர்களும் நின்று கொண்டிருக்கின்றனர். இவர்களைப் பார்த்துக் கேலி பேசுகின்றனர். யூதன் கடவுள் கட்டளைகளையும் சமுதாய நியதிகளையும் மீறி நடப்பதாகக் குற்றம் சுமத்துகிறார்கள், அந்தச் சமாரியனை உதைக்க வேண்டும் என்கிறான் கூட்டத்தில் ஒருவன். அந்தக் கூட்டம் கையிலிருந்த தடிகளோடு அவர்களை நெருங்குகின்றது. சமாரியன் தன் யூத நண்பனை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, தன் உடைவாளை உருவுகிறான். வாளைக் கண்டவுடன் திரும்பி ஓடுகிறார்கள் வந்தவர்கள்.