பக்தி உணர்வை வெளிப்படுத்துவதற்குத் தமிழ் சிறந்த மொழியாகும். எனவே, ஒவ்வொரு சமயத்தவரும் கடவுளரைப் பாடுவதற்கும். சமயக் கோட்பாடுகளை விளக்குவதற்கும் பக்தியை வெளிப்படுத்துவதற்கும் பலவகை இலக்கியங்களைத் தமிழில் படைத்து வந்துள்ளனர். இவ்வகையில் கிறித்தவச் செய்திகளைக் கொண்ட சிற்றிலக்கியங்களும் தமிழில் தோன்றியுள்ளன.கிறித்தவச் சிற்றிலக்கியங்கள், கிறித்துப் பெருமானைச் சிறப்பித்துப் பாடுகின்றன. இயேசுவின் அன்னையையும், தந்தையையும் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்ட சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன. இறையடியார்களின் வரலாறுகளும் சிற்றிலக்கியங்களாகப் பாடப்பட்டுள்ளன. விவிலியச் செய்திகளை எடுத்துரைக்கவும், கிறித்தவக் கோட்பாடுகளை விளக்கவும் சிற்றிலக்கியங்கள் பல தோன்றியுள்ளன. தம் குறைகளுக்கு வருந்தி, பக்தியை வெளிப்படுத்தி, நிலையான வாழ்வை நல்க, இறையருளை வேண்டும் பாங்கு கிறித்தவச் சிற்றிலக்கியங்களில் மிகுந்துள்ளது. இயேசு பெருமானைத் தமிழ் மண்ணுக்கும், தமிழ்ப் பண்பாட்டு மரபுகளுக்கும் உரியவர் என்பதை விளங்கச் செய்வதில் கிறித்தவச் சிற்றிலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.