உலக வரைபடம் என்பது கோடுகளாலும் குறிகளாலும் கோலங்களாலும் ஆனது அன்று .
அது கோடுகளுக்கிடையே உயிரோட்டமாகக் காணப்படும் மலைகளும் காடுகளும் நதிகளும்
இயற்கை வளங்களும் மக்கள் கூட்டமும் உயிரினப் பெருக்கமும் உடையது. நிலப்
பகுதிகளைக் கொண்டு உயிர்வாழ்க்கை நடத்திய இனக் கூட்டங்கள் மிகுந்த உலகம்
இது. அக்கூட்டங்கள் ஒழுக்கமாகவும் அறநெறிகளைப் பின்பற்றியும் வாழும்
நோக்கத்தில் அவர்களுடைய வாழ்க்கையினைச் செம்மைப்படுத்தச் சமயங்கள்
தோன்றின. அந்த வகையில் உலகச் சமயங்கள் வரிசையில் இந்து மதம், சமண மதம்,
புத்தமதம், சீக்கிய மதம், சொராத்திரிய மதம், யூத மதம், கிருத்துவ மதம் என
ஏழு சமயங்கள் பற்றிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இனக்கூட்டங்கள்
பின்னர் அரசு நடத்தும் நிலைக்குமாறி சாம்ராஜ்யங்களாக உருப்பெற்றன.
பல சாம்ராஜ்யங்கள் தோன்றினாலும் அவை தத்தம் சக்திக் கேற்ப உலகிலும்,
உலகச் சமுதாயத்திலும், நாகரிக நிலையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
கால வெள்ளம் சிலவற்றை மூழ்கடித்து விட்டது. சிலவற்றின் சுவடுகளை ஆங்காங்கே
விட்டு வைத்துள்ளது. அவை நினைவுச் சின்னங்களாக, கோட்டைச் சிதைவுகளாக,
அரண்மனைச் சுவடுகளாக, அவற்றை மாற்றி எழுத முடியாத இலக்கியங்களாக ஆங்காங்கே
தென்படுகின்றன.