இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டபின்னர் பலநாடு களையும் காண வேண்டும் என்றும், உற்பத்தி செய்த பொருள் களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் எழுந்த உந்து சக்தியின் மூலம் பிற நாடுகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் நிலை ஏற்பட்டது. அந்த வகையில் முதல் முயற்சியாக இந்தியாவுக்கு கடல்மார்க்கம் காணும் எண்ணத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய நாடுகளைக் கண்டுபிடிக்கும் மோகத்தில், அந்நாடுகளில் உள்ள செல்வங்களைக் கவரும் நோக்கத்தில் அப்பயணங்கள் தொடர்ந்தன. அப்பயணத்தின் முடிவில்தான் உலகம் உருண்டை என்ற புதிய சிந்தனையும் வளர்ந்து வென்றது எனலாம். அப்படி நாட்கணக்கில், மாதக்கணக்கில் கடலில் பயணம் செய்து உண்ணும் உணவு, உடுக்கும் உடை இவைகளுக்காகப் பேராடி புதிய நாடுகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய மாலுமியே கொலம்பஸ் என்னும் துணிச்சல் மிக்க வீரர்.80 வீரர்களுடன் பனியென்றும் வெயிலென்றும் பாராமல் உயிரைப் பணயம் வைத்து ஆழ்கடலின் அலைகளைப் போர்த்திக் ண்டு அவர் கண்டுபிடித்த புதிய நாடே மேற்கு இந்தியத் தீவுகள். இப்படியே தொடர்ந்தன பயணங்கள். துலங்கின புதிய நாடுகள். இந்தியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, தென்முனையான சிசிலி, அண்டார்டிக்கா நாடுகளுக்கான கடல் வழிகள் தோன்றின. எனப் புதிய புதிய நாடுகள் கண்டுபிடிப்பின் புத்துலக சிற்பியாகத் திகழும் கொலம்பஸை இக்கால இளைஞர்களுக்கு உணர்த்தும் பொருட்டு புதியன செய்யும் துணிவினை ஊட்டும் வகையில் கொலம்பஸின் வரலாற்றினை பள்ளி மாணவர்களுக்கேற்ற வகையில் திரு.சி.பி. சிற்றரசு அவர்கள் எழுதியுள்ளார். பல்லாண்டுகளுக்கு முன்பு வெளிவந்துள்ள இந்நூல் மாணவர்களின் பயன்பாடு கருதி எளிதாகக் கிடைக்கும் வகையில் இப்பொழுது எமது பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களும் மற்றவர்களும் இந்நூலை வாங்கிப்படித்துப் பயனடைவார்கள் என்று நம்புகிறோம்.
கொலம்பஸ் - - ஆர்ப்பரித்துவரும் அலைகள் எதிர்க்க, வானக் கூரையில் இருண்ட மேகங்கள் பயங்காட்ட, இடை விடாத புயல் இங்குமங்குமாக ஓடத்தை அலைக்கழிக்க, கற்பாறைகள் இடையிடையே வழிமறிக்க திசைகாட்டும் கருவி ஒத்துழைக்காமல் ஒதுங்கி நிற்க, வைகரை, காலை, கதிரவன், வெப்பம்,நண்பகல், மதியம், மாலை, இரவு, திங்களின் தேய்பிறை, வளர்பிறை பல நாட்கள் தோன்றித் தோன்றி மறைய, சுக்கான் உடைய, நங்கூரம் ஓய்வெடுக்க, திசைத் தடுமாற ஏழாயிரம் மைல்கள் விரிந்துகிடந்த வான் கடலால் அட்லாண்டிக் மாகடலின் மேல் தள்ளாடி நடக்கும் வயோதிகன் போல் தளர்ந்து நடையிட்டுச் செல்லுகின்றன மூன்று மரக் கலங்கள். இதற்கு முன் யாருமே போக நினைக்காத புதுப் பாதை. போகலாம் என்ற நினைவையே பூகோளத்தில் காட்டப்படாத புது உலகம், இருக்கிறது என்ற ஆதாரமுமில்லை. இருக்கலாம் அல்லது இருக்கக்கூடும் என்ற அனுமானம் ஒன்றுதான். அதுவும் இவ்வளவு தூரத்தில் இருக்கக்கூடுமென்று சொல்ல முடியாத தூரம்.