குறளின் திரள் பொருளே அறன்வலியுறுத்தல்தான். அறன் வலியுறுத்தலாவது அறன் வலிமையுடைத்து என்பதனை அறிவுறுத்தலும், அறநெறியே மாந்தரின் நல்வாழ்வுக்கு உகந்தது என வற்புறுத்திக் கூறுவதுமாம். இவ்வதிகாரம் அறத்தின் விழுப்பம் கூறி அதன் இயல்பு வரையறுத்து அறச்செயல் எது என்பதைச் சொல்லி அதனால் பெறப்படும் பேறுகளை விளக்குகிறது. அறவோர்க்கே அறம் சிறப்பானாலும் எல்லோர் வாழ்விலும் அது அடிப்படை ஆதல் வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது.