“வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு” நூல் வெளியாகி மூன்றாண்டு முடியுந்தறுவாயில்
நான்காவது பதிப்பு வெளிவர நேர்ந்திருப்பது குறித்துப்
பெருமகிழ்ச்சியடைகின்றேன். தமிழ்மக்கள் காட்டிய பேராதரவே இதற்குக்
காரணமாதலால், அவர்கள் எல்லோருக்கும் எனது வணக்கத்தையும் நன்றியறிதலையும்
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
நான்காவது பதிப்பு வெளிவருந்தருணத்தில் பாரத அரசினரின்
நிறுவனமான சாகித்திய அகாதமியாரின் பெருமைக்குரிய பரிசினையும் எனது நூல்
பெறுவது குறித்து நான் மட்டுமேயன்றி, தமிழ் மக்கள் எல்லோருமே
பூரிப்படைகின்றனர் என்பதனை நான் அறிவேன். இந்தப் பரிசின் விளைவாக, பாரத
மொழிகள் அனைத்திலும் இந்நூல் மொழி பெயர்க்கப்படுவதற்கான வாய்ப்புக்
கிடைத்திருக்கிறது. இது நிகழுமானால், அருட்பிரகாச இராமலிங்க வள்ளலாரின்
பெருமையைப் பாரதமக்கள் எல்லோருமே அறிய வாய்ப்புக் கிடைக்கும். இறையருள்
இந்த அற்புதத்தை நிகழ்த்துமென்றே நம்புகின்றேன். இரண்டாவது மூன்றாவது
பதிப்புகளைப் போலவே இந்த நான்காவது பதிப்பும் மலிவுப் பதிப்பாக
வெளிவருகின்றது.