நிலவுடைமை தலையெடுத்த காலம் அது. நிலத்தை மையமாக வைத்துப் பெருநிலக்கிழார்கள் என்ற உயர் பிரிவினர் தோன்றினர். இவர்கள் கிழார், வேளிர், குறுநிலமன்னர், அரசர் என வர்க்கப் படிநிலைகளால் அறியப்பட்டனர். சுரண்டல் வடிவம் கொடுமையானது. புண்ணுக்குப் புனுகு பூசுவதுபோல் அறச்செயலும் கொடையும் முன்னிறுத்தப்பட்டன. இவர்களுக்குப் பின்னால் உடலுழைப்பைப் பிழைப்பாதாரமாகக் கொண்ட வினைஞர், கடையர், மள்ளர் என்பவர்கள் வறுமையின் வடிவமாகப் பிரிக்கப்பட்டனர். இவர் களின் எளிய வசிப்பிடமும் உணவும் பெரும் பாணாற்றுப்படையில் சித்திரிக்கப்பட்டன. அதே நூல் கிழார்களின் உணவுச் செழுமையைப் பேசியது. இருவேறு வாழ்நிலையினரிடையில் முரண்பாடு தோன்றாமல் வள்ளன்மை புகழ்ப் பட்டால் போர்த்தப்பட்டு முன்வைக்கப்பட்டது. நிலத்தைப் புலவர்க்கும் வீரர்க்கும் பார்ப்பனர்க்கும் கொடையளித்த அரசர்களைப் பற்றிச் சங்க நூல்கள் பரவலாகப் பாடின.ஐந்திணை பாடிய இனிய நூல் நற்றிணை. இந்நூலில் ஒரு பாங்கை உணர்த்துகிறது ‘நற்றிணையில் நன்னெறிகள்’ என்ற கட்டுரை. தீயவர்க்குத் திருந்த வாய்ப்பளித்துப் பொறுமை பூணுவதே மேலானது. இது ஒன்று. மற்றொன்று புரட்சி அணுகுமுறை பூண்டது. அரசர் பாராட்டும் யானை மீதும் குதிரை மீதும் ஊர்தலும் உண்மைச் செல்வமன்று. ஆதரவற்றவர்களைக் காப்பதும் உறவுக்கு உதவுவதுமே செல்வர் கடமை.