நானெழுதிய எந்த நூலையும் ஆழ்ந்து வாசிக்காமல் ‘இவன் வட்டார வழக்குகாரன், வெள்ளாள எழுத்துக்காரன், இவன் அம்மா இவனை அமாவாசை அன்று பெற்றாள்’ என்றெல்லாம் ‘வயிற்றுக் காந்தல் கண்ணி’ பாடுபவர்களை யாரால் என்ன செய்யவியலும்? அவர்கள் செல்வாக்குடையவர்கள். 29ம் நூற்றாண்டை இன்றே சிந்திக்கிறவர்கள், பாறையைப் பிழிந்து பழரசம் போலப் பருகுகிறவர்கள், வாசித்திராத எம்மொழி எழுத்தும் இனிமேல்தான் எழுதப்படவே வேண்டும்! யாமோ, எளிய தமிழ் மாணவன். இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறவன். தமிழ் கற்க இவ்வாயுள் போதாது என்று புலம்புகிறவன்…