கல்வெட்டின் அடிப்படையில் ஆய்வினை மேற்கொண்டு தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்ட காலம் கி.மு. 1465 எனக் கணிக்கப்பட்டுள்ளது இந்நூலாசிரியரால். கி.மு.2ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வரலாறுகள் இல்லை என்ற நிலையை மாற்றி கி.மு. 1465க்கு முன்பே தமிழ் இலக்கியம் சிறப்புற்றிருந்தது என விளக்கி அந்த வளமான சூழலிலிருந்து உருவானதே தொல்காப்பியம் எனத் தெளிவுபடுத்தி அதன் காலம் கணிக்கப்பட்டுள்ளது என்கிறார் இந்நூலாசிரியர்.
தமிழின வரலாற்று மூலத்தைக் கி.மு. 1465 எனக் கொண்டு தொல்காப்பியத்தின் வழியே தொன்மைத் தமிழக வரலாறு என்னும் இந்நூலை நாணயவியல் ஆய்வறிஞர் பொறியாளர் மா.கந்தசாமி அவர்கள் அரிதின் முயன்று எழுதியுள்ளார். தொல்காப்பியத்தின் பெருமையைப் பொறுக்காத ஆரிய விரும்பிகள் களவியல் உரையைக் கற்பித்தனர் என்றும் அகத்தியர் என்னும் ஆரிய இருடியை உயர்த்திப் பிடித்தனர் என்றும், தொல்காப்பியத்தின் சிறப்புப்பாயிரம் ஆரிய விரும்பிகளால் சேர்க்கப்பட்ட இடைச்செருகல் என்றும் பல்வேறு செய்திகளை விளக்கியுள்ளார். 'மடலேறுதல்' என்பதற்கு புதிய விளக்கம் அளித்துள்ளார். ஆசிரியருடைய இத்தகைய கருத்துகள் மேலும் ஆய்வுக்குரியன. சிந்தனையைத் தூண்டுவன.