கங்கு என்றால் ஓரம், எல்லை, வரம்பு என்று அர்த்தம். கிணற்றின் ஓரத்தையும் வயலின் ஓரத்தையும் கங்கு என்று அழைக்கும் வட்டார வழக்குச்சொல் தற்கால காவிரிக்கு தென்கரையில் உள்ள கொங்கு பகுதிகளிலும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களிலும் வழக்கில் உள்ளது. மேலும், கேழ்வரகின் உமிக்கும் மேல் உள்ள புறத்தோலை கொங்கு, கொங்க(கொங்கை) என்று அழைக்கும் வட்டார வழக்குச்சொல் தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர் மாவட்ட கிராமங்களில் வழக்கில் உள்ளது. சங்ககால தமிழகத்தின் எல்லையில் ஆண்டதால் கங்கன் என்ற பெயர் வந்தது. எல்லையில் ஓடுவதால் கங்கை என்ற பெயர் வந்தது. அதன்படி, முடியுடை வேந்தர்களான சேர, சோழ, பாண்டிய நாட்டின் வடமேற்கு எல்லை கங்கில்(ஓரத்தில்) அமைந்ததால் கங்கு, என்று இருந்து காலப்போக்கில் கங்கு>கெங்கு>கொங்கு என மருவியது.
கொங்கு என்ற சொல்லுக்கு தேன், சாரல் என்று பொருள். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்குச் சரிவுப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தேன் மிகுந்திருந்ததால் இப்பகுதி கொங்கு எனவும், குடநாட்டில் (கேரளாவின் வட பகுதி) மிகுதியாய் பெய்யும் மழையின் சாரல் மிகுந்து பெய்ததால், இப்பகுதி கொங்கு எனவும் கூறுவார் உண்டு.