சிலப்பதிகாரக் கண்ணகியின் கணவன் கோவலன் கொலையுண்டதும், கண்ணகி நீதி கேட்டு நின்றதும், மன்னன் தன் குற்றம் உணர்ந்து தண்டனை பெற்ற நிலையையும் முதல் கட்டுரை எடுத்துரைக்கிறது. "ஆடு, மாடுகள் போல்தின்று திரியாமல் எல்லா வயதினரும் தங்களால் இயன்ற நோன்புகளை மேற்கொண்டு வாழ்க்கையில் அமைதியும் இன்பமும் பெற முயலவேண்டும் என்று நோன்புகள் என்ற கட்டுரையில் கேட்டுக்கொள்கிறார்.
பிறர் வெற்றி கண்டு மகிழவும் பாராட்டவும் முன்வரவேண்டும் என்றும், பல நோய்களை எண்ணங்களாலேயே தீர்த்துவிட முடியும் என்றும், புகழ்பெற வசைகளையும், எதிர்ப்புகளையும் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் துணிச்சல் பெறவேண்டும் என்றும்நூலின் கட்டுரைகள் விளக்குகின்றன. நம்பிக்கை இல்லாதவர்கள் நடைபிணங்களுக்குச் சம்மானவர்கள் என்று சாடுகிறார்.
உடலும் உள்ளமும் நலம்பெற யோகாசனங்கள் அவசியம் என்றும், வரையறைகளுடன் இன்பம் துய்ப்பதில் நன்னெறியைப் பின்பற்றினால் மருந்துகள் தேவையற்ற வாழ்க்கை வாழலாம் என்றும், சுவைக்காகச் சாப்பிடுவதை விட உடல் நலனுக்காகச் சாப்பிடுவதே நல வாழ்வுக்கான நல்வழி என்றும் தெளிவு செய்கிறார்.