இதுவரை உலகத்தில் அவதாரப் புருஷர்கள் ஒவ்வொருவராக வந்திருக்கின்றனர். இரு அவதாரப் புருஷர்கள் ஒரே சமயத்தில் வந்தது இல்லை. முதன்முதலாக அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் ஒரே சமயத்தில் அவதரித்தார்கள். மேலும் அவர்கள் இணைந்து செயல்பட்டனர். உலக சரித்திரத்தில் இது ஒரு மாற்றம், புதுமை, உயர்வு. வேத காலத்திலிருந்து, உபநிஷதம், கீதை ஏற்பட்ட நாளிலிருந்து, இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இராமலிங்க சுவாமி நாள்வரை யோக விஷயங்கள் விளக்கமாக எழுத்தப்படவில்லை. பதஞ்ச யோக சாஸ்திரம், உபநிஷதங்கள், கீதை உள்பட யோக விஷயங்களைச் சுருக்கமாகச் சுட்டிக்காட்டுவதே மரபு; விளக்கமாக எழுதப்படவில்லை என்பது மட்டுமன்று, விளக்கமாக எழுதக்கூடாது என்பதே மரபு. அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் இந்த மரபுக்கு விதிவிலக்கு. அவர்கள் எழுதியவை பல்லாயிரம் பக்கங்கள். அவை அனைத்தும் யோகப் பயிற்சியை மட்டுமே விளக்குபவை. மற்ற விஷயங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார்கள்.