அப்படிப்பட்ட ஒரு குழு பெருங்குளத்தில் நாடகங்கள் நடித்துக் காட்ட வந்தது. நாடகமேடை அமைத்து, அரங்கமாகக் கொட்டகைப் பந்தல் போடப்பட்டது. நாடகம் பார்க்கிறவர்கள் திறந்தவெளியில் அமர்ந்து தான் கண்டுகளிப்பார்கள். நாடகம் நடத்துவதற்கு முன்னதாக நாடகக் கான்ட்ராக்டர் ஊரின் பெரிய மனிதர்களை சந்தித்து வணங்கி, விஷயத்தை எடுத்துக் கூறி, உங்கள் ஆதரவு வேண்டும் என்று கேட்டுக் கொள்வார். அந்த ரீதியில் அவர் அப்பாவை சந்தித்து ஆதரவு கோரினார். நீங்கள் தினசரி வந்து நாடகம் பார்க்க வேண்டும் குடும்பத்தோடு வந்து பாருங்கள் என்று வேண்டிக்கொண்டார். நாடகம் ஒரு இரவு நடந்தால், அடுத்த இரவு நாடகம் கிடையாது. மூன்றாம் நாள் இரவு தான் புது நாடகம் நடத்தப்படும். இப்படி ஒரு மாத காலம் நாடகம் நடைபெற்றது. அப்பா அண்ணனையும் என்னையும் அழைத்துச் சென்றார். வேலைக்காரன், வீட்டிலிருந்து மூன்று நாற்காலிகளை எங்களுக்காக எடுத்து வந்தான். அவனும் நாடகம் பார்த்துக் கொள்ளலாம். வள்ளி திருமணம், பவளக்கொடி அல்லிஅர்ஜுனா, நல்ல தங்காள், சதாரம் போன்ற நாடகங்கள் நடித்துக் காட்டப்பட்டன. அத்தகைய நாடகங்களில் நடித்து அனுபவம் பெற்ற நடிகநடிகையர் நடித்தார்கள்