நாம் இன்று காணும் பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டு, வேலை தேடிக் குடும்பத்தில் ஒவ்வொரு வரும் வெவ்வேறிடங்களுக்குச் செல்வதற்கு முன்னால் வரை, குடும்பங்கள் ஒரே இடத்தில் ஒன்றாக இருந்தவரை, வீட்டில் வயதான தாத்தாக்களும், குறிப்பாகப் பாட்டிகளும் இருந்தார்கள். பேரக் குழந்தைகளுக்கு அவர்கள் கதை சொன்னார்கள். சாப்பிட, குப்பையைக் கொத்தும் குருவிக் கதையிலிருந்து ராமாயண மகாபாரதக் கதைகளையெல்லாம் அவர்கள் சொன்னார்கள். அடம் பிடிக்கும் குழந்தை கூட பாட்டி சொல்லும் கதைகளைக் கேட்டுக் கொண்டு வயிறாரச் சாப்பிடும். அப்படிச் சின்னஞ்சிறு பிராயத்தில் கதைகள் நமது வாழ்க்கையில் இடம் பெற்றிருந்தன. எனவே கதை என்பது நமக்குப் புதிதல்ல. ஆனால் இன்றைக்கு சுமார் நூறாண்டுகளுக்கு மேலாக ஆங்கிலக் கல்வியின் தாக்கத்தால், மேற்கத்திய இலக்கிய விதிகளின் படி நமது நாட்டிலும் நவீனங்கள், சிறு கதைகள், நாடகங்கள் என்று எழுதத் தொடங்கினோம்.