இவரது ஒவ்வொரு நாவலும் மக்களின் கவனத்தைக் கவர்ந்ததோடு, தமிழக அரசின்
சிறந்த நாவலுக்கான பரிசு, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும்
பதிப்பாளர்கள் சங்க விருது எனப் பல விருதுகள் கிடைத்தன. இவரது 'கேட்ட வரம்'
நாவலை ஸ்ரீ காஞ்சி பெரியவர் புகழ்ந்து ஆசீர்வதித்தார் என்பது
குறிப்பிடத்தக்கது. இவரது 'மாற்றாந்தாய்' சிறுகதைக்கு 'ஜகன் மோகினி' இதழில்
சிறுகதைப் போட்டிக்கான தங்கப் பரிசு கிடைத்தது. இவர் பறவையினங்களைப் பற்றி
ஆழ்ந்து ஆராய்ந்து, சிறுவர் இலக்கியமாக நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார்.
இவர் ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளரும் கூட! இவருக்கு பிரெஞ்ச், ருஷ்யன்,
ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, சம்ஸ்கிருதம் என்று பல மொழிகள் தெரியும்
என்றாலும், ஆங்கில இலக்கியத்தில் நல்ல பற்று உண்டு. பலரின் வாழ்க்கையில்
இவரது நாவல்கள் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. தனது துணிச்சலான
எழுத்துக்கள் மூலம் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திற்கு மெளனமாகவே ஒரு பெரிய
சேவை செய்திருக்கும் இவர் எழுத்துலகப் பிரம்மா.'