வானொலி என்ற ஊடகம் இப்போது பயன்பாட்டில் இல்லை எனப் பலர் நினைக்கிறார்கள். தொலைக்காட்சி மக்கள் மத்தியில் பரவுவதற்கு முன்னால் வானொலி ஒரு இன்றியமையாத சாதனமாக இருந்து வந்தது.
முன்பெல்லாம் எல்லா நகரங்களிலும் பல கடைகளில் வானொலிப் பெட்டிகள் வாங்கக் கூடியதாக இருக்கும். வானொலிப் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ள வசதிகளுக்கு ஏற்ப விலை இருக்கும். சாதாரண நடுத்தர குடும்பங்கள் கூட வாங்கக்கூடிய குறைந்த விலையில் வானொலிப் பெட்டிகள் கிடைத்தன.
வானொலி ஒலிபரப்பு என்றால் இப்போதுள்ள இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு பண்பலை நிலையங்கள் பற்றியே தெரியும். இவற்றைச் செல் ஃபோன்களில் கூடக் கேட்கக் கூடியதாக இருப்பதால் இந்தப் பண்பலை ஒலிபரப்புகள் பிரபலமாக உள்ளன.
நடுத்தர வயதினரிடையே வானொலி ஒலிபரப்புகள் பற்றிய நினைவு பசுமையாகவே இருக்கிறது. சென்னை வானொலி, திருச்சி வானொலி, இலங்கை வானொலி என இன்றைக்கும் பல அனுபவங்களைச் சொல்வார்கள்.
இந்த ஒலிபரப்புகள் எல்லாம் எங்கே போய்விட்டன?
எங்கும் போகவில்லை. இப்போதும் வானொலி நிலையங்கள் இயங்கிக் கொண்டுதானிருக்கின்றன. வானொலிப் பெட்டிகளும் விற்பனைக்கு உள்ளன. ஆனால் அவற்றைத் தேடுவோர் அரிதாகிவிட்டது.
தேடுவோர் அரிதாகியதற்கு மக்களை மட்டும் குறை சொல்வதில் அர்த்தமில்லை. மக்களுக்கு, அதுவும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு வானொலியின் பண்புகளை, அதன் சிறப்புகளை எடுத்துக்கூறும் நூல்கள், வெளியீடுகள் இல்லை.
இந்தக் குறையைப் போக்கும் வகையில் ஒரு அருமையான நூல் வெளியாகியுள்ளது. முனைவர் தங்க. ஜெய்சக்திவேல் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள “உலக வானொலிகள்” என்ற நூல் வானொலி ஒலிபரப்புகள் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது