ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு முன்னர் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் பங்குச் சந்தையில் காலடி வைப்பவர்கள் மியூச்சுவல் ஃபண்டைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது என்பது அனுபவப்பட்டவர்கள் சொல்லும் அறிவுரை. பங்குச் சந்தை முதலீடு என்பது நாமே கார் ஓட்டுவதுபோல் செல்ஃப் ட்ரைவிங் என்றால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது தேர்ந்த ஓட்டுனரை வைத்து கார் ஓட்டுவது மாதிரி என்றும் குறிப்பிடுகிறார்கள். இன்றைய அவசர உலகில், முதலீட்டைப் பற்றி தினம் தினம் கவலைப் படாமல் நிம்மதியாக அன்றாட வேலைகளைக் கவனிக்க வழி செய்வது மியூச்சுவல் ஃபண்ட் என்கிற தெளிவைக் கொடுக்கிறார்கள் இந்த நூலாசிரியர்களான நாகப்பனும் புகழேந்தியும். அது சரி ஆள் வைத்து ஏன் கார் ஓட்ட வேண்டும்? பங்குச் சந்தையிலேயே ஏன் நேரடியாக முதலீடு செய்யக் கூடாது? என்று ஒரு கேள்வி எழுவது இயல்பு. பெர்னாட் பரூச் என்ற அறிஞர் சொன்னாராம்... பங்குகளை மிகக் குறைந்த விலையில் வாங்கி உச்ச விலையில் விற்பது என்பது பொய்யர்களுக்குத்தான் சாத்தியம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் பங்குச் சந்தை கில்லாடியான ஜே.பி.மார்கனிடம், சந்தையின் போக்கு இனி எப்படி இருக்கும்? எனக் கேட்டபோது, ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும்! என்று சொன்னாராம் அவர். அப்படிப்பட்ட கில்லாடிகளுக்கே போக்குக்காட்டிய பங்குச் சந்தையில் சாமானியன் காலூன்ற நாளாகும். அதற்கு முதல் படி மியூச்சுவல் ஃபண்ட் என்பது இந்த நூலில் தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நூல் மூலம், மியூச்சுவல் ஃபண்டைப் பற்றிய தெளிவும், நிறுவனங்களைப் பற்றிய தகவலும் பெற்று வாசகர்கள் பயனடையலாம்.