என்னும் சாதாரண பொருளின் பெயரை வைத்து நடத்தும் போராட்டமென அரசு முதல் அரசியல் தலைவர்கள் வரை காந்தியடிகளின் போராட்டத்தை குறைத்து மதிப்பிட்டனர். ஆனால் அது முடிவடையும் கட்டத்தில் யாருமே எதிர்பார்த்திராத ஒரு பேரெழுச்சியையும் அரசுக்கெதிரான பார்வையையும் உருவாக்கிவிட்டது. உப்பு ஓர் அரசியல் ஆயுதமாக மாறி நின்றதை இந்த உலகமே பார்த்தது.
மண்ணில் உப்பானவர்கள் தொகுப்பு அந்த மாற்றம் எப்படி நேர்ந்தது என்பதை நமக்குக் காட்சிப்படுத்துகிறது. வெறும் எண்பது பேர்களை மட்டுமே கொண்ட நடைப்பயணம் எதைச் சாதிக்கப்போகிறது என்று அலட்சியமாக ஒதுக்கித் தள்ளியவர்களெல்லாம், வியப்போடு பார்க்கும் வகையில் உருமாறிய அரசியல் விசித்திரத்தை இன்றைய தலைமுறையைச் சேர்ந்த புதிய வாசகர்களுக்கு உணர்த்துகிறது இந்நூல். காந்தி எதைச் சாதித்தார், எப்படிச் சாதித்தார் என்னும் கேள்விகளுக்கான விடைகளை சித்ரா பாலசுப்பிரமணியனின் சித்தரிப்புகள் வழங்குகின்றன.
– எழுத்தாளர் பாவண்ணன்