ஆவிக்குரிய ஜீவியத்தில் மன உறுதி மிக முக்கியமானது. உறுதியான மனமே ஜெய ஜீவியத்தை உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் கொண்டு வரும். பாவத்திலிருந்தும், அக்கிரமத்திலிருந்தும் விடுதலை பெற்ற நீங்கள், கர்த்தரை உறுதியான மனதோடு பற்றிக் கொள்ள வேண்டும். ஆவியின் பிரமாணத்தை நிறைவேற்றுவதற்கு உங்களை முற்றிலும் அர்ப்பணிக்கும்போதுதான், கர்த்தருடைய ஒத்தாசையும், உன்னத பெலனும் உங்களுக்குக் கிடைக்கும்.வேதத்திலே, ரூத், நகோமியை உறுதியான மனதோடு பற்றிக் கொண்டாள். "நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து, என்னோடே பேச வேண்டாம்" (ரூத். 1:16) என்று உறுதியாய் சொன்னாள். மனதில் தீர்மானித்தபடியே நகோமியைப் பின்பற்றினாள். ஆகவேதான் கர்த்தருடைய சந்ததியில் அவள் இடம் பெற்றாள்.