அறிவியல், உலகத்தை ஆண்டு கொண்டிருந்தாலும் அதற்கும் ஒரு மொழி தேவை படுகின்றது இக்காலத்தில். மொழி என்றவுடன் பலருக்கும் எழுத்து வடிவம் மட்டும்தான் கண் முன் நிற்கும். மொழி எழுத்தால் மட்டும் உருவானது அல்ல. மாறாக, அது பல்வேறு வடிவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நுண்பொருள். உலகில் உள்ள அனைத்து பொருட்களும் பேசுகின்றன. அவை வெவ்வேறு மனிதர்களிடம் வெவ்வேறு விஷயங்களை வெவ்வேறு வகையில் பரிமாறிக் கொள்கின்றன. இவற்றைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மூடமாக இருக்கலாம். ஆனால், பரிமாறிக் கொள்ளப்படுகின்ற மொழியைப் புரிந்து கொள்பவர்களுக்கும் உணர்ந்து கொள்பவர்களுக்கும் அது அதிசயம்தான்.
அன்று பிரியா வீட்டிற்கு வந்திருந்தாள். ஏழு மாதக் குழந்தை அவள். என் கணவரின் அக்காள் மகள். அவள் வருகையால் வீடே மகிழ்ச்சியில் நிரப்பியிருக்கும். வீட்டில் உள்ள அனைவரும் அவளின் சேட்டைகளையும் அவளின் குரலையும் கேட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பார்கள். என்னையும் உட்பட. அடிக்கடி ஏதாவது ஒலிகளை எழுப்பிக் கொண்டே இருப்பாள். அவள் முட்டியிட்டு நகரும் போது ஒரு விதமான ஒலியையும் விளையாடும் போது மற்றொரு வேறுபட்ட ஒலியையும் எழுப்புவாள். அந்த ஒலியும் அவள் செய்து கொண்டிருக்கும் செயலுக்கும் சம்பந்தமே இருக்காது. அந்த ஒலிகளின் மூலம் நான் அறிந்து கொள்ள கூடிய எந்தவொரு அர்த்தமும் அதில் ஒட்டிருக்காது. இருந்த போதும், அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள்: ஏதோ ஒன்றைச் செய்வதை விரும்புகிறாள் என்பது மட்டும் எங்களுக்குப் புலப்படும். இன்னும் சிறிது நேரம் கழிந்த பின், அவள் அழும் சத்தம் கேட்கும். உடனே என் மாமியார் அவளுக்குப் பசி என்று அறிந்து கொள்வார். பாலைக் கலக்கிக் கொடுத்த பிறகு அழுகை நின்று விடும்.மீண்டும்விளையாட ஆரம்பித்து விடுவாள் பலவிதமான ஒலிகளை எழுப்பிக் கொண்டே. அவள் பசிக்காகதான் அழுகிறாள் என்பதையும் பசிக்கு மொழி அழுகை என்பதையும் இருவரும் நன்றாகப் புரிந்து வைத்திருந்தனர். தங்களை அறியாமலே ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.