உலகத்தின் மிகப் பழமையான முழு இலக்கிய நூல் என்று இந்தக் கில்காமெஷ்
கதையைச் சொல்ல வேண்டும். கி.மு. 2,500 அளவில் இது பெரிய குனிஃபார்ம்
(திரிகோண வடிவ) எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு, பல இடங்களில் தோண்டி
எடுக்கப்பட்ட கற்களிலிருந்து பல நிபுணர்கள் சேர்ந்து சேர்ந்துத் தந்த கதை.
கவிதை, உரைநடை என்று மொழி ஓரளவுக்கு மேல் பிரிவுபடாத காலத்தில், அணி
அலங்காரங்கள் அதிகமாக மனித மனத்தை ஆட்கொள்ளாத நாட்களில் தன் புகழ் நிலைக்க
வேண்டும் என்கிற ஆசையுடன் ஒரு வீரன் தன் செயல்களைத் தனக்குத் தோன்றிய
நிரந்தர அளவில் கல்லில் பொறித்து வைத்த விஷயம் இது. அப்படியும் கில்காமெஷ்
என்கிற பெயர் அதன் காலத்தில் எவ்வளவு உயர்வாக மதிக்கப்பட்டிருந்தாலும்,
கி.மு. 1,000 முதல் கி. பி. 1920 வரையில் யாருக்கும் தெரியாத பெயராகவே
போய்விட்டது. இதைவிடச் சிறப்பாக உலகில் புகழின் தன்மையை நிரூபிக்க வேறு
ஒன்றும் வேண்டியதில்லை என்று சொல்ல வேண்டும்.