அவர்களது இரண்டு படுக்கையறை வீட்டிலிருக்கும் சின்னப் படுக்கையறையை ஒட்டியுள்ள சிறு முகப்பின் கதவை மூடிக்கொண்டிருந்த நிஷாந்தை நெருங்கியவள், அவன் பின்பக்கம் சென்று அவனை உரசியவாறே "போகலாமா? நான் ரெடி!" என்றாள் மெதுகுரலில். மாந்தளிர் வண்ணத்தில் மேலுடையும், அடர் குங்கும் வண்ணத்தில் கீழ் சட்டையும், குங்கும வண்ணமும் மாந்தளிர் நிறமும் சமபங்கில் கலந்த மெல்லிய மேல் துணியுமென எழில் பாவையாய் நின்றிருந்த அனுஜாவின் மேனியே இளந்தளிராய்தான் மிளிர்ந்து கொண்டிருந்தது. மலரத்துடிக்கும் ஆப்பிள் மரத்தின் தளிர் போன்ற கண்கள், மொட்டாய் இருந்தாலும் நுனியில் சிவந்திருக்கும் தாமரை மொட்டு போன்ற சின்ன மூக்கு, மலர்ந்தும் மலராத ரோஜா மலர் போலிருந்த கன்னங்கள், முழுதாய் மலர்ந்து சுகமான சுவைதரும் மாதுளம் கனி போன்ற உதடுகள், மாதுளை முத்துக்களைத் தோற்கடிக்கும் வண்ணம் முத்து முத்தாய் பூத்திருந்த பச்சரிசி பற்கள் - அவளது மேனியே பார்ப்பவருக்கு ஓர் சுகமான சுகம் தந்தது; கண்கொண்டு பார்ப்பவருக்கே குளுமையான அழகாய் காட்சிதரும் தேவதை -கட்டியவன் கண்ணுக்கு மின்னமாட்டாளா? அதுவும் திருமணம் முடிந்து ஆறு மாதமே ஆனா இந்த நிலையில்! அருகில் நின்றிருந்தவளின் அழகில் மயங்கியிருந்தவன், அவளது நெருக்கத்தில் கிறங்கி "நான் ரெடி இல்லை" என்ற முணுமுணுப்புடன் மனைவியை சிறை செய்தான் - கைகளுக்குள்.