தந்தையின் அறிவுரையைக் கேட்கும் மனநிலையில் அருண் இல்லை. அப்பா, ஒரு நிமிடம்தானே இவ்வளவு பெரிதுபடுத்துகிறீர்களே. எனக்கு ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை என்றான்.
அதற்குள் அருணின் அம்மா குறுக்கிட்டு, தம்பி நேரத்தின் அருமையை நீ எப்போதுதான் உணரப் போகிறாயோ தெரியவில்லை. உன் அறிவாற்றல், புத்திக்கூர்மையைப் பார்த்து நாங்கள் வியந்திருக்கிறோம். ஆனால், உன்னிடமுள்ள இந்த ஒரு நிமிட சோம்பேறித்தனத்தை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறோம். எனவே, அப்பா சொல்வது உனது நன்மைக்கே என்பதைப் புரிந்து நடந்துகொள் என்றார். அருணின் மனமோ எதையும் கேட்பதற்குத் தயாராக இல்லை.பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் வாங்கினான். எனினும், அவனிடமிருந்த அந்த ஒரு நிமிடத் தாமதம் மட்டும் மாறவில்லை. பட்ட மேற்படிப்பினைப் படித்துக் கொண்டே, பட்டப் படிப்புத் தகுதிக்கான அரசாங்கத் தேர்வுக்கு விண்ணப்பித்தான். அந்தத் தேர்வில் வெற்றிபெறத் தேவையான அறிவாற்றலை மேலும் வளர்த்துக் கொண்டான்.தேர்வு எழுதும் நாளும் வந்தது. மணி அடித்ததும் தேர்வு அறையினுள் அனைவரும் சென்று தங்கள் தங்கள் எண் எழுதப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர். வினாத்தாளும் கொடுக்கப்பட்டது.வழக்கம்போல் அருணின் வாசகமான, ஒரு நிமிடத் தாமதத்தில் தேர்வு எழுதப்போகும் கல்லூரி வாசலில் நுழைந்தான். விரைந்து சென்று தன் எண் எந்த அறையில் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டான். அறைக்குள் சென்று இருக்கையைத் தேடி அமர்ந்தான். அருண் ஒரு நிமிடத் தாமதமாக வந்தது, அய்ந்து நிமிடத் தாமதத்திற்கு வழிவகுத்தது.சக மாணவ மாணவியர் தேர்வினை எழுத ஆரம்பித்துவிட்டனர். இதனைப் பார்த்த அருணின் மனம் சற்று படபடத்தாலும் நம்பிக்கையுடன் வினாத்தாளை வாசிக்க ஆரம்பித்தான்.