மாதவி, சிலப்பதிகாரத்தில் வருகிற ஆடல் மகள். வசந்தசேனை மிருச்சகடிகத்தில் வரும் கணிகை. இவ்விரு இலக்கியப் படைப்பபுகளிலும் மிகுந்த ஒற்றுமையான இயல்புகள் உள்ளன. மாதவியும், வசந்தசேனையும் திருமணத்திற்குத் தகுதியில்லாத சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இருவரும் அரசரால் கௌரவிக்கப் பெற்றவர்கள். செல்வச்செழிப்பில் திளைத்தவர்கள். ஒருவனோடு வாழ விரும்பியவர்கள். சாதி ஒழுக்கத்திற்கு முரணான ஆசை கொண்டவர்கள். மனித உயர்வான காதலுக்கும், சாதி ஒழுக்க விதிகளுக்கும் ஏற்படும் முரண்பாட்டில் அவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். இம்முரண்பாடுகளை இருவேறு விதங்களில் கவிஞர்கள் தீர்த்து வைக்கிறார்கள். கணிகையர் வாழ்க்கைப் பிரச்சினை பண்டைக்கால இந்தியக் கவிஞர்களைக் கவர்ந்துள்ளது என்பதை இப்பாத்திரப் படைப்புகள் மூலம் காண்கிறோம். கா. சுப்பிரமணியன், இரு பாத்திரங்களின் ஒற்றுமை, வேற்றுமைகளையும்,அவர்களது வாழ்க்கைப் பிரச்சினையையும், கவிஞர்களது தீர்வு முறையையும் ஆராய்கிறார்.