செம்மொழியாகத்
திகழும் நம்மொழி புதிய நடையும், புதிய உடையும், புதிய பொருளும் கொண்டு
எழுச்சியுடன் திகழக் காரணமாக அமைந்த தமிழ்ச் சிற்பிகளில் மகாகவி சுப்ரமணிய
பாரதியார் முதலிடம் பெறுகிறார். மறுமலர்ச்சித் தமிழின் திருவுருவாகத்
திகழ்பவர் அவர். அவர் வாழ்ந்த 39 ஆண்டுகளில் பதித்த சுவடுகள் காலங்காலமும்
நின்று பெரும்பயன் தருவதாயுள்ளது. பரண்களில் கிடந்த தமிழ்ச் சொற்களைத்
தூசுத்தட்டி வீதிக்குக் கொண்டு வந்த வித்தகர். புலவர் பெருமக்களின் தனிச்
சொத்தாக இருந்த செந்தமிழைப் பாமரனின் பொதுச் சொத்தாக மாற்றிய புனிதர்.
அவருடைய எழுத்துகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு பலபகுதிகளாக வெளிவந்துள்ளன.
அவை கால வரிசைப்படுத்தப்பட்ட நிலையில் 12 தொகுதிகளாக பாரதி ஆய்வறிஞர் சீனி.
விசுவநாதன் அவர்களால் வெளியிடப் பெற்றுள்ளன.