அல்பெர் கமுய் படைத்துள்ள இப்புதினத்தை, அண்மையில் உலகை உலுக்கிய கொரோனா
பெருந்தொற்று நோயின் கடந்தகால வடிவமான பிளேக் நோயைப் பற்றிய புனைவாகக்
கொள்ளலாம். கமுய் பிறந்த அல்ஜீரியாவில் ஓரான் என்னும் ஊரில் இப்புதினத்தில்
விவரிக்கப்படும் பிளேக் நோய் தொடர்பான சம்பவங்கள் நடைபெறுகின்றன.
1940களில் தாக்கியதாகச் சொல்லப்படும் அந்நோய் எத்தகைய விளைவுகளைச்
சமூகத்தில் ஏற்படுத்தின என்பதை அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கிறார்
கமுய். வெறுக்கத்தக்க அம்சங்கள்தான் மனிதர்களிடம் அதிகமாக மண்டிக்
கிடப்பதாக நம்மில் பலருக்கும் ஆதங்கம் இருக்கும். ஆனால், ஆராதிக்கக்கூடிய
எத்தனையோ பண்புகள் மக்களிடம் உள்ளன என்பதை இப்புதினம் விளக்குகிறது.
பெருந்தொற்று என்பது ஓர் உருவகம், ஒரு வடிவம், ஒரு குறியீடு. போர்,
அடக்குமுறை போன்ற எவையெல்லாம் மனிதன் இறக்கக் காரணமாகின்றனவோ அவையெல்லாம்
பெருந்தொற்றுதான். வாழ்க்கை என்பது அபத்தம் என்று கூறி விரக்தி அடையாமல்
சவால்களை எதிர்த்துப் போராட வேண்டும். அதன் மூலம் வாழ்க்கைக்கு ஓர்
அர்த்தத்தைத் தேடலாம் என்பதே இந்நாவலில் கமுய் தரும் செய்தி.