1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் இறையாண்மை, மதச் சார்பின்மை, ஜனநாயகம், சமத்துவம், சதோதரத்துவம், சமூக நல்லிணக்கம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை தலைவர்களும் மக்களும் உணர்ந்திருந்தனர். எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களால் கிடைத்த சுதந்திரம் கருத்து. பேச்சு, வழிபாடு. நீதி என்று வாழ்வின் எல்லாத் துறைகளிலும் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை அப்போது இருந்தது. ஆனால் சுதந்திரம் பெற்ற பிறகு நடந்த மாற்றங்களின் விளைவாக இன்று தனி மனித சுதந்திரம், மத நல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் நாட்டு மக்களின் ஒற்றுமை ஆகியவையே கேள்விக்குறியாகி உள்ளன.
1970களில் தமிழகத்தின் தென் பகுதிகளில் நடந்தவற்றைப் புனைவாகப் பதிவு செய்தது ‘வருவான் ஒருநாள்’ நாவல். அதன் மறு பதிப்பு வெளிவரும் வேளையில் நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகிறோம். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பிறகு நமது கிராமங்களில் வாழும் சாமானிய மக்களின் நிலை மாறி உள்ளதா என்று இந்த நாவல் நம்மை யோசிக்க வைக்கும். நாம் தொடர்ந்து துணிந்து பயணிக்க வேண்டிய பாதைக்கு இந்த நாவல் வழிகாட்டும்.