இரண்டாம் வகுப்புப் படிக்கையில் அத்தை வீட்டில் படிக்கப் போட்டார் என் அப்பா. அம்மாவின் சேலைக் கதகதப்புக்குள்ளேயே வளர்ந்தவனுக்கு அது செரிக்க முடியாத பேரதிர்ச்சியாக இருந்தது.காலை ஐந்தரை அல்லது ஆறுக்கு எழுந்து பல் விளக்கிவிட்டு, முகம் கழுவிக் கொண்டு திருநீறு தீற்றிக் கொண்டு கடவுளர்களின் படங்களுக்கு முன் நின்று கஜானனம் பூத கணாதி என்று துவங்கி பத்து நிமிடம் சுலோகங்கள் சொல்லிவிட்டு விழுந்து எழுந்து பாடப் புத்தகங்களை வைத்து கொண்டு பத்து நிமிடமாவது படித்தால்தான் காப்பியே கிடைக்கும்.