2001 செப் 11-ஐ அத்தனை எளிதாக யாரும் மறந்துவிட இயலாது. இரட்டைக் கோபுரத் தாக்குதலை ஒட்டி உலகம் மாறிய நாள் அது. அமெரிக்காவின் கீழே உள்ள கியூபப் பகுதியில் அப்போது நிறுவப்பட்ட சிறை முகாம்தான் அது. அங்கு நடந்த சித்திரவதைக் கொடுமைகள் குறித்து கசிந்து வந்த செய்திகள் நம் நெஞ்சை உலுக்கின. ஐயத்திற்கிடமானவர்கள் அங்கே கொண்டுவந்து குவிக்கப்பட்டனர். ஆனால் அவர்களை, கைதிகள் அல்லது விசாரணைக் கைதிகள் என்றெல்லாம் வகைப்படுத்துவதில்லை. அவர்கள் தடுத்து வைக்கப்பட்டவர்கள் 'detainees' என்று மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டார்கள். எந்த தேசிய அரசுகளின் சட்டங்களும் செல்லுபடி ஆகாத குடிமக்கள் என்போருக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட Right Free Zones அவை. தடுத்து வைக்கப்பட்டவர்கள் மனிதர்கள் அல்ல. அவர்கள் 'பயங்கரவாதிகள்'. உரிமைகள் அற்றவர்கள். 21 ஆண்டுகள் இன்று ஓடிவிட்டன. உலகம் மாறிவிட்டது. உலகளாவிய மனித உரிமைகள் என்பன இன்று படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. அரசியல் சட்டங்கள் இன்று கேலிக்குரியவை ஆக்கப்பட்டுவிட்டன. இப்படி இன்றைய உலகம் என்றென்றும் நெருக்கடி நிலைக்கு ஆட்பட்டுவிட்ட வரலாற்றை இந்தியப் பின்னணியில் விரிவாகச் சொல்லிச் செல்கிறது இந்நூல்.