ஆண்டாண்டு காலமாக வாழும் தங்கள் பூர்வீக மண்ணில் அடிப்படை உரிமைகளோடு சுதந்திரமாக வாழ ஆசைப்பட்ட, உலகின் மூத்த சமூகமான தமிழ்ச் சமூகத்தை கடந்த 2009இல் பல்வேறு நாடுகளின் துணையோடு இனப்படுகொலை செய்திருக்கிறது இலங்கையின் பேரினவாத அரசு.
இனப்படுகொலைக்குள்ளான தமிழ்ச் சமூகம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதி வேண்டி உலகின் மனசாட்சியை தட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதை எதையும் கண்டுகொள்ளாமல் இன்றுவரை கள்ளாமெளனம் காக்கும் சர்வதேசச் சமூகம், இப்போது தனது நலனை முன்னிறுத்தி இலங்கைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு உதவிகளை செய்துவருகிறது. எந்த நாடுகளெல்லாம் இனப்படுகொலை போரில் இலங்கைக்கு உதவி செய்தார்களோஅந்த நாடுகளே இன்று தமிழர்களுக்கு தீர்வு தருகிறோம் எங்களை நம்புங்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்.
இந்த வகையில் இப்போரில் தமிழர் தரப்பினரான விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக நுணுக்கமாக திட்டமிட்டு, திறம்பட செயல்படுத்திய அமெரிக்காவின் செயல்களை உங்களிடத்தில் அளிக்கிறோம். இத்தொகுப்பு ஒரு சிறிய அளவிலான புரிதலுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. விரிவான ஆய்வுகளை வாய்ப்புள்ள காலகட்டத்தில் மே பதினேழு இயக்கம் வெளிக்கொண்டுவரும் என நம்புகிறோம்.