எட்டயபுரத்திற்கு செல்லும்போதெல்லாம், பாரதி மணி மண்டபம் பார்த்து வருபவர்கள் அநேகம். ஆனால், அவர்களில் பலருக்கு பிதப்புரம் தெரியாது. அங்கே பாரதியின் அப்பா சின்னச்சாமி ஐயர் கட்ட முயற்சித்து பாதியில் சிதைந்த நிலையில் இருக்கும் நூற்பாலை கட்டிடம் பற்றி எழுத வேண்டும் என தோணியது. எட்டயபுரத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் சோள தட்டைகள் விளைந்த வயக்காடுகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த சிதைந்த கட்டிடம் அரசின் கவனத்திற்கு வராமலே இருப்பது தான் வரலாற்று சோகம். அந்த இடத்தில் ஓர் பெயர்ப்பலகை கூட கிடையாது.
அதே போலத்தான் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்... இசை என்றாலே அது தெலுங்குக் கீர்த்தனைகள் மற்றும் வடமொழிக்கு மட்டுமே உரித்தானது எனும் அறியாமை நோய் தமிழர்கள் மத்தியில் விரவிக் கிடந்த காலத்தில் அதனை பொய்யென உணர்த்தும் வகையில் தமிழ் இசையின் பாரம்பரியத்தையும் அதன் மேன்மை மற்றும் தகுதியை உலகறியச் செய்தவர். இவர் பிறந்தது நெல்லை மாவட்டம் சாம்பவர் வடகரை. ஆப்ரஹாம் பண்டிதர் இயற்றிய ‘கருணாம்ருத சாகரம்’ என்ற அரிய இசை நூல் புகழ் பெற்ற நூலாகும். பெரும்பாலான கிருஸ்தவ குடும்ப திருமணங்களில் பாடப்படும் இசைப்பாடல்கள் இவரது பாடல்களே. ஆனால், எழுதிய கவிஞர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆபிரகாம் பண்டிதர் என்ற தகவல் நெல்லை வட்டாரத்துக் காரர்களுக்கே தெரியாது.
இது போன்ற விஷயங்களை பேஸ்புக்கில் தினமும் ஒரு பதிவாக போட்டு வந்தேன். அதுவே இப்போது இரண்டாவது நூலாக உருவாக்கி இருக்கிறது.