திரவியலாபத்தை எவ்வாற்றானுங் கருதி முயன்றிலேன் கைநஷ்டம் வராதிருப்பதொன்றே எனக்குப் போதும். இதுவரையிற் பதிப்பித்த நூல் களால் எனக்குண்டான நஷ்டங் கொஞ்சமல்ல. இவ்வித முயற்சியிற் கையிடுவோர் நஷ்டமுறாதிருத்தற் பொருட்டுச் சர்வகலா சாலைப் பரீக்ஷையிற் தேறி, ஆங்காங்குப் பெரும் உத்தியோகம் வகித்திருப்போர் தத்தஞ் சொயபாஷையில் அச்சிடப்படும் பூர்வ கிரந்தங்களில் ஒரு பிரதி வாங்குதல் அவர் கடமை யென்றெண்ணுகின்றேன்.
- சி.வை.தா.
இளம்பூரணத்தை யான் படித்தபோது அதன் உயர்வும், சிறப்பும், எளிய நடையும் தொல்காப்பியத்திற்கு யான் உரை எழுதுவது மிகையென்று நினைக்கச் செய்தன. பின்னர் என் உரையைப் பூர்த்திசெய்யும் எண்ணத்தை விடுத்து, இளம்பூரணத்தை அச்சிட்டு வெளிப்படுத்த எண்ணிணேன். முதலில் எழுத்ததிகாரத்தை ஒருபுத்தகமாகவும், பின்னர்ப் பொருளதிகாரத்தின் அகத்திணை-யியலையும், புறத்திணையியலையும் ஒரு புத்தகமாகவும் அச்சிட்டு வெளிப்படுத்தினேன்.
- வ.உ.சி.