வரலாற்றை அரசியல்வாதிகள் கையிலெடுப்பதன் ஆபத்தை பரமசிவ அய்யரின் Ramayana and Lanka என்ற நூல் மூலம் விளக்குவது குறிப்பிடத்தக்கது. தேவதாசி வாழ்வு பற்றி எழுதும்போது, சுதந்திரமான பாலியல் தேர்வை இழிவு எனக் கருதும் ஆணாதிக்க நோக்கிலிருந்து பாலியல் தொழிலை மதிப்பிடுவது எத்தனை தவறோ, அத்தனை தவறு சுதந்திரமான பாலியல் தேர்வு சாத்தியம் என்கிற ஒரே காரணத்தை வைத்து பாலியல் தொழிலை உன்னதப்படுத்துவதும்கூட. என்று சொல்லிவிட்டு, பிரச்சினைகள் சிக்கலானவை, எளிய தீர்ப்புகள் சாத்தியமில்லை என்றும் சொல்கிறார். விரிந்த பார்வை, அகன்ற படிப்பு, பிரச்சினைகளை எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளாமல் அவற்றின் சகல பரிமாணங்களுடன் அணுகுதல் என்பவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கட்டுரைகள் இன்றைய இளைஞர்கள் ஆழப் பயில்வதற்கு உரியன.
- மு. சிவகுருநாதன்