இந்த நூல் கலியாண சுந்தரம் அல்லது அன்னிபெஸட் சிலை மர்மம், வடுவூர்
துரைசாமி ஐயங்கார் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால்
வெளியிடப்பட்டது.
பதிப்புரை:
பரபரப்பு குறையாமல், அந்த பரபரப்புக்கு என்று நிகழ்ச்சிளைத்
தொடுக்காமல், ஆபாசமில்லாமல், ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி,
அபத்தங்களைக் கொட்டாமல், முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை விறுவிறுப்பைக்
குறைக்காமல், நிகழ்ச்சி மேல் நிகழ்ச்சியாக உருவாக்கி, புத்திசாலித்தனமாக,
சாதுர்யமாக கதாபாத்திரங்களைப் பேச விட்டு, சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு
மனிதனும் எப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது... போன்ற அற்புதமான
தகவல்களைச் சொல்லும் நாவல்கள் தான் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல்கள்.
இவருடைய கதைகளில் காதல் காட்சியும் வரும், கோர்ட் சீனும் வரும், போலீஸ்
நடவடிக்கைகளும் வரும், மருத்துவரின் சேவையும் வரும் - இப்படி அநேகமாக
எல்லாத் தரப்பு மனிதர்களின் மேன்மையைப் பற்றியும் சொல்வார்.
அதே சமயத்தில், இதே சமுதாயத்தில் நல்லவர்கள் மத்தியில் வாழும் வக்ர
புத்தி உள்ளவர்களைப் பற்றியும் சொல்லி, அப்படிப்பட்டவர்களை எப்படியெல்லாம்
அடக்கி ஆளலாம் என்பதைப் பற்றியும் சொல்லியிருப்பார். இவருடைய
எழுத்துக்களில் சிரிப்புக்குப் பஞ்சம் இருக்காது. கதைகளில் நிலவும் கடினமான
சூழ்நிலையையும், படு சாதாரணமாகக் கையாண்டிருப்பார். சிக்கலையும்
உருவாக்கி, அந்தச் சிக்கலிலிருந்து விடுபடும் வழியையும் சொல்வார். வடுவூர்
துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவல்களைப் பதித்தல், பொழுது போவது மட்டுமன்றி,
பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
தமிழில் நெடுங்கதை அல்லது நாவல் தோன்றிய ஆரம்ப கால கட்டத்தில் வடுவூர்
துரைசாமி ஐயங்கார் இந்த நாவல்களை எழுதியுள்ளார். அந்த காலகட்டத்தில்
இவருடைய நாவல்களைப் படிக்காதவர் எவரும் இருந்திருக்க முடியாது. மிகவும்
பிரபலமாகப் பேசப்பட்ட 'திகம்பர சாமியார்' இவருடைய பாத்திரப் படைப்பு.
திகம்பர சாமியாரின் அறிவு அளவிட முடியாதது. மிகவும் புத்திசாலியானவர்.
தன்னுடைய ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும், செயலிலும் பல்லாயிரக்கணக்கான
அர்த்தங்களை யூகிக்க வைப்பார். இவருடைய ஒவ்வொரு நாவலும், ஒன்றை ஒன்று
மிஞ்சி நிற்கிறது.