அவரது பொது வாழ்வின் தொடக்கமே சுதேசியப் பணிகளுடனும் தொழிலாளர் இயக்கத்துடனும் பின்னிப் பிணைந்து நிற்கிறது. வ.உ.சி.யின் சிறை வாழ்க்கைக்கு முன்னர் தொடங்கிய அவருடைய தொழிலாளர் இயக்கப் பணி, சிறையிலிருந்து வெளிவந்த பின்னரும் தொடர்ந்தது. 1908இல் நடத்தப்பட்ட தூத்துக்குடி கோரல் ஆலை வேலைநிறுத்தமும், தொழிலாளர் எழுச்சியும், வ.உ.சி. சிறை சென்ற பிறகு அடக்கப்பட்டுவிட்டது என்பது மட்டுமல்ல, வேலை நிறுத்தத்தினால் கிடைத்த உரிமைகளும் பறிக்கப்பட்டன. அமைப்பு அடிப்படையில் தொழிற்சங்கமாக உருப்பெறாததாலேயே தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளையும் இழந்தார்கள். ஆனால் வ.உ.சி. சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, தொழிலாளர்களை அமைப்பு அடிப்படையில் ஒன்றிணைத்து, போராட்ட சக்தியாக உருவாக்கப் பெரு முயற்சிகளை எடுத்துக்கொண்டார். அப்பொழுதும்கூட அவர் அரசியல் பொது நோக்கத்தை நிறைவேற்றும் சக்தியாகத் தொழிலாளர்கள் திகழ்வார்கள் என்றே நம்பினார்.