கொப்பளிக்கும் வெப்பத்தை மார்பில் வாங்கிக் கொண்டிருக்கும் எம் நிலத்தில், பெருந்தாகம் கொண்டு நீருக்கு அலைந்து வரும் பறவைகளின் சிறகுகளை ஒத்தது எனதந்தி வாழ்க்கை. நீங்கள் மிக சாதுர்யத்தோடு அம்புகள் பூட்டிய வில் ஒன்றையோ அல்லது கந்தகம் கிடித்த துப்பாக்கிகளையோ எனை நோக்கி ஏய்தியபடி நிற்கிறீர்கள். உங்களின் தீவிர குறிப்பார்த்தலுக்கு அப்பாலும் ஒரு விளிம்பில் தப்பித்து தப்பித்து உயிர்க்கொண்டிருக்கிறது. அல்லது சுவாரஸ்யங்களுக்காக நீங்களே தப்பிக்க விடலாம். எனினும் வெகு விரைவில் வீழ்த்திவிடும் சாதுர்யங்களை கைக்கொண்டிருக்கிறீர்கள்.ஆகவே வாழ்தலுக்கும் வீழ்தலுக்குமான இடையில் வாழ்ந்துவிட நேர்ந்த கணங்களில் விழைந்த புன்னகையையும் கண்ணீர் துளிகளையும் அப்படியே தந்துவிட நேர்ந்ததின் பொருட்டே இந்த எழுத்தாக இருக்கலாம்.