உளவியல் கதைகளென்று தனியாக ஒன்று இல்லை. எல்லா ஆழமான இலக்கியப் பிரதிகளுமே மனித உளவியலைப் பற்றித்தான பேசுகின்றன. அவ்வளவு ஏன், குற்றம் சார்ந்த துப்பறியும் கதைகள்கூட ஒருவிதத்தில் மனிதர்களின் உளவியலோடு தொடர்புடையதுதான். அடிப்படையில் ஓர் உளவியல் மருத்துவரான சிவபாலன் இளங்கோவன் இந்தச் சிறுகதைகளில் மனித மனதின் ஆழம் காணமுடியாத புதிர்களையும் விசித்திரங்களையும் வினோத முடிச்சுகளையும் மிக நுட்பமாகத் தேடிச் செல்கிறார். ஒருவிதத்தில் இந்தக் கதைகள் உங்களைப் பற்றியது. நாம் காண்பதற்கு சங்கடப்படுகிற நமது சொந்த மனங்கள் பற்றியது. மனித மனதின் இந்த இருண்ட பாதையை தனது புனைவின் வழியே சிவபாலன் இளங்கோவன் வெளிச்சமுடையதாக்குகிறார்.