படிக்காத மேதை, கர்மவீரர், தென்னாட்டு காந்தி, பெருந்தலைவர் என்ற பட்டங்களுடன் அழைக்கப்படும் காமராஜர், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ந்த மகத்தான மக்கள் தலைவர். அரசியல் ஆளுமையும், தொண்டர்கள் பலமும் மிக்கவரான காமராஜருக்கு, கிங் மேக்கர் என்ற பட்டமும் உண்டு. காரணம், தமிழகத்தில் பல முதல்வர்களை அவர் உருவாக்கினார்.ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமாரசாமி ராஜா, ராஜாஜி ஆகியோரை காமராஜர்தான் முதல்வர்களாக ஆக்கினார். ஒருகட்டத்தில், கட்சியிலும் ஆட்சியிலும் நெருக்கடி ஏற்பட்டபோது, அவரே முதல்வர் நாற்காலியில் அமர வேண்டிய சூழல் ஏற்பட்டது. காமராஜர் முதல்வர் ஆனது, தமிழகத்துக்கு திருப்புமுனையான தருணம்.