க.சீ.சிவகுமாரின் புத்தகங்கள் கல்லூரிக் காலத்தில் அறிமுகமாகின. நகைச்சுவையும் இயல்பான மொழி நடையும் துல்லியமான கவனிப்பும் அவருடைய பெரும்பலமாக இருந்தன. இன்னமும் வெகு உயரங்களை அடைந்திருக்க வேண்டியவர்.ஒன்றேகால் மணிவாக்கில் பிரேதப் பரிசோதனை முடிந்து வெள்ளைத் துணியைச் சுற்றி எடுத்து வந்து வைத்தார்கள். கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார் என்ற அடையாளம் இல்லாத வெற்று உடல் அது. முகத்தில் சிறு பிசிறு கூட இல்லை. சவரம் செய்யப்பட்ட முகம் தெளிவாக இருந்தது. அந்த மென்புன்னகை அப்படியே இருந்தது. சிவகுமார் அண்ணனுக்கு நாற்பத்தியாறு வயதாகிறது. அவருக்கு இன்னமும் காலம் இருந்தது. அவர் இன்னமும் நிறைய எழுதியிருக்க வேண்டும். ஆனால் காலம் அவரை வாரிக் கொண்டது.