தொகுப்புரை:
யாயும் ஞாயும் யாராகி யரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும்
நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம்தாம்
கலந்தனவே!
- குறுந்தொகை: 40,
காதல் விநோதமானது; கவர்ச்சியானது: மாயமான மனித குலத்தின்மீது நிழலாகப்
பற்றிப் படர்ந்திருப்பது. கொண்டாட்டம். முறையில் மகிழ்ச்சி, பதற்றம்,
ஏக்கம், விழைவு, தவிப்பு, காத்திருப்பு, சீற்றம், கொந்தளிப்பு, கோபம்,
பயம், மயக்கம் எனப் பல்வேறு உணர்வு நிலைகளில் காதல் ஏற்படுத்தும்
அனுபவங்கள் அளவற்றவை. வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே காதல்
எனும் மர்ம ஆறு சுழித்தோடிக் கொண்டிருக்கிறது. காதல் என்ற சொல்லுக்குள்
புதைந்திருக்கும் பிரமாண்டமான ஆற்றல். சமூகத்தைக் காலந்தோறும் உயிர்ப்புடன்
இயங்கச் செய்கிறது. புராதன மனிதனின் மூளையை இயக்கிய காதல், ஒருவகையில்
சித்தப்பிரமைதான். அது, இன்றளவும் தொடர்கிறது. கடந்த காலத்தில் சமூக
வரலாற்றைப் புரட்டிப் போடவும், வன்முறையாளரை அமைதிப்படுத்தவும். எளிய
மனங்களை மனப்பிறழ்விற்குள்ளாக்கவும், பேரரசுகளை வீழ்த்திடவும்,
மென்மையானவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கவும் ஆற்றல்மிக்க காதல், வற்றாத
ஆறுபோல எல்லா தேசங்களிலும் பொங்கியோடிக் கொண்டிருக்கிறது.
மனித மனத்திற்கு மிகவும் நெருக்கமான காதல், படைப்பாளர்களின் மனதில்
காலந்தோறும் சலனங்களை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. 'மலரினும் மெல்லிது
காமம்' என்கிறார் திருவள்ளுவர். காதல் என்றாலே கிளுகிளுப்பு, மகிழ்ச்சி
என்று சராசரி இளைஞனும் இளைஞியும் நினைக்கும்வேளையில் நவீனக் காதல் கதைகள்
வேறுபட்டனவாக உள்ளன. அவை, மாறிவரும் பெண் ஆண் உறவின் புதிய போக்குகளையும்,
காதலின் பன்முகத்தன்மைகளையும் மனத் தடைகளற்று விளக்குகிறது இக்கதைகள்