சூஃபிக் கூடம் (தைக்கா / ஃகான்காஹ்) ஒவ்வொன்றும் ஒரு பூங்காவைப் பெற்றிருந்தது. புறவுலகை விட்டும் அது உயரமான நெடுஞ்சுவர்களால் கவசமிடப்பட்டிருந்தது. பெரும் பறவை ஒன்றின் நீளும் சிறகினைப் போல் சூஃபிக் கூடத்தைக் கட்டமைக்கும் பல கட்டிடங்களையும் இணைக்கும் மையப் புள்ளியாகப் பூங்கா அமைக்கப்பட்டது. தியானமும் ஞான இசையும் நிகழும் ’சமாஃகானா’, ஞான உரையாடல்கள் நிகழும் ’மஜ்லிஸ்’, பெண்களின் தனியிடம் (ஹரம்), மடப்பள்ளி (அதாவது, சமையலறை), நூலகம், நீர்த்தடாகம், குருவின் இல்லம் மற்றும் பள்ளிவாசல் ஆகியன எல்லாம் அந்தப் பூங்காவிலிருந்து செல்ல முடிந்தவையாக அமைந்தன.