ஒளிப்பதிவாளர்களுக்கு மூர்த்தியின் மந்திரங்கள்: நீ ஒளிப்பதிவாளன் மட்டுமல்ல, எழுத்தாளனும் கூட. உன் வேலை ஒளியில் எழுதுவது. வெறுமனே வெளிச்சத்தில் தூரிகை ஆட்டுவதல்ல. ஒளியும் கூட ஒரு கலைஞன் என்பதை நினைவில்கொள். ஒளியால் அது இரவா, மாலையா, விடியலா தெரியவரும். ஒளியால் மூட் துயரமானதா, மகிழ்ச்சியானதா, பீதியானதா தெரியவரும். ஒளியை கலைஞன் என்று நினைத்தால் சரியான மூட் படைக்க முடியும். உன் வேலை அழகான போட்டோகிரபி செய்வதல்ல. கதையை நன்றாகச் சொல்வது. நன்றாக கதை சொல்லும் போது கேமரா எங்கேயும் தலை நுழைக்காது. ஒரு உருவம் மற்ற உருவ தொடர்பிலிருந்து மாற்றமடைய வேண்டும். நிறம் மற்றொரு நிறத் தொடர்பால் உண்டாவது போல. பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணங்களின் அருகே நீல வண்ணம் நீலமாக இருப்பதில்லை. அந்த மாற்றம் இல்லாமல் கலை இல்லை.