இந்த உலகில் அதிகாரங்களும் அவை எழுதும் விதிகளும்தான் உண்மை என்ற
நியமங்களும், இன்னார் செய்தால் சரி வேறாள் செய்தால் தவறு என்ற இரட்டை
நியாயங்களும் இன்னும் பலவும் குடைச்சலைத் தந்துகொண்டேயிருக்கின்றன. அந்த
நியமங்களதும் இரட்டை நியாயங்களதும் பகுதியாகவும் பங்காளர்களாகவும்
முழுமையாக மாறிவிடுவோமோ என்ற சவால் பெருகிக் கொண்டேயிருக்கின்றது. எதையும்
ஆட்சேபிக்காது, கேள்விகள் கேட்காது மௌனமாக வாழ முடியவில்லை.
செயற்பாட்டாளராக நேரடியாக போராடுவது போதவில்லை… மனதில் எழும் கேள்விகள்,
கோபங்கள் படமாகக் கோடுகளிலும் வர்ணங்களிலும் வருவதற்கு முன்னர்
வார்த்தைகளாக, வசனங்களாக, கவிதைகளாகத்தான் மனதில் ஓடுகின்றன… அரை
நித்திரையிலும், குளிக்கும் போதும், வேறு ஏதாவது வேலையிலிருக்கும் போதும்
தலைக்குள் ஓடும் வார்த்தைகளில் சிலதான் எனக்கு பிறகு ஞாபகம் இருக்கும்.
காகிதம் கிடைத்தால் எழுதுவேன்.