இந்நூலில் கடவுள் இல்லையென்றால் எப்படி இல்லை, ஏன் இல்லை என்பதனைத் தெளிவாக விளக்கிக் கூறி அதற்கான உண்மைச் சான்றுகளை எடுத்துக் காட்டியுள்ளேன். "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்குக் கற்றனைத்து ஊறும் அறிவு", என்பதற்கேற்ப இந்நூலினைக் கசடறக் கற்கக் கற்கக் கற்போருக்குப் பகுத்தறிவு ஊறும் அவரின் அய்யமனைத்தும் ஞாயிறு முன் பனி போல் விலகிவிடும். பின்னர் அவர்கள் செம்பொருள் கண்டப் பகுத்தறிவாளர்களாகப் புத்துயிர் பெற்றெழுவர் என்பது திண்ணம். மக்களனைவரும் பகுத்தறிவாளர்களாகத் திகழ வேண்டுமென்பது தான் இந்நூலின் உயர் நோக்கம். "தாம் இன்புறுவது உலகு இன் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்", என்பது போல் பகுத்தறிவால் இவ்வுலகம் இன்புற வேண்டும்.