எட்டுத் தொகை, பத்துபாட்டு என்ற பழந்தமிழ்ப் பாடல்களின் தொகுப்பு நூல்களில் 'கலித்தொகை', 'பரிபாடல்' தவிர ஏனையவை அகவல்பாக்களால் ஆக்கப்பட்டவை. அவை கி.பி. 250-க்கு முற்பட்டவை. கலித்தொகையும் பரிபாடலும் களப்பிரர் (சமணர்,பௌத்தர்) என்ற கர்நாடக் இனத்தாரின் ஏறத்தாழ முந்நூறு ஆண்டு அரசாட்சிக்குப் பிறகு கி.பி.575-இல் மதுரையைத் தலைநகராகக் கொண்டு மேற்கிளம்பிய பாண்டியர் அரசாட்சிக் காலத்தில் தோன்றியவை. இரண்டு தொகை நூல்களும் கலிப்பா, இசைப்பாடல்களான பரிபாடல் ஆகியவற்றால் இயற்றப்பட்டவை. மதுரை, வையை, பரங்குன்றம், மதுரைத் தமிழ்ச் சங்கம் (கி.பி. 427-இல் வஜ்ரநந்தி என்ற சமணமுனிவர் மதுரையில் உண்டாக்கிய 'திரமிள சங்கம்' (தமிழ்ச் சங்கம்) என்பதைப் பின்பற்றி உருவானது), ஆகியவற்றை மையமாகக் கொண்டு இவை தோன்றின. இவை, இனக்குழுச் சமூக மரபில் பரிணாமம் பெற்ற சேர சோழ பாண்டிய வேந்தர் கால அரசியல் பொருளதார கலாசார சூழல்கள் சமண பௌத்த வைதீகப் போட்டிச் சமயங்களின் கலாசாரங்களால் முந்நூறு ஆண்டுகளாகப் பெரும் மாற்றம் பெற்றபின் தோன்றின.