அப்போது "பால் சோறா” என்ற பெயர் கொண்ட பட்டணம் எல்லா வளங்களையும்
கொண்டு சிறப்புடன் விளங்கியது. அந்தப் - பட்டணத்தில் கிடைக்காத
பொருட்களே இல்லை எனலாம். எனவே, அங்குள்ள மக்களும் மகிழ்ச்சியுடன்
காணப்பட்டார்கள். அந்தப்பட்டணத்தைத் தலை நகராகக் கொண்டு
சுற்றுவட்டாரங்களையெல்லாம் ஒரு சேர ஆண்டு வந்த மன்னன் பெயர் சயின் அலாஸ்
நாம் என்பதாகும். அவன் மக்களிடத்தில் மிகவும் அன்பு கொண்டவனாகவும், ஆதரவு
மிக்கவனாகவும் இருந்தான். அவன் ஆட்சியில் மக்கள் அனைவரும் மன நிறைவு
பெற்றவர்களாகக் காணப்பட்டார்கள். மக்களின் நலமான வாழ்க்கையில் அக்கறைமிகக்
கொண்டவனாக இருந்து வந்தசயின் அல்லாஸ் நாமுக்கு ஒரு பெருங்குறை இருந்து
வந்தது. தனக்குக் குழந்தை இல்லாத பெருங்குறை அவனைப் பெரிதும்
வருத்தமுறச்செய்தது. அவனுடைய ஆட்சியின் கீழ் நலமுடன் வாழ்ந்து வந்த
மக்களும் தங்கள் மன்னனுக்குக் குழந்தைச் செல்வம் இல்லையே என்று கவலை
கொண்டவர்களாக இருந்தார்கள். தன்னுடைய காலத்திற்குப் பிறகு நாட்டையாளும்
வாரிசு இல்லையே என்று கவலை கொண்ட மன்னன் சயின் அலாஸ் நாம், வைதீகர்களை
அழைத்துத் தன்னுடைய மனக்குறையைக் கூறவும் அவர்கள் எல்லாம் வல்ல இறைவன்
அருளால் நிச்சயமாக அவனுக்கு ஒரு மகன் பிறப்பான் என்று உறுதியாகக் கூறவும்
அவனும் மகிழ்ச்சியடைந்தான். அவர்களின் வாக்குப்படித் தனக்கு ஒருமகன்
பிறந்தால் அவர்களுக்குப் பொன்னும் மணியும் வாரிவாரிக் கொடுத்து மகிழ்ச்சி
கொள்ளச் செய்வதாகக் கூறினான்.