பாசிச சித்தாந்தம் என்ற மற்றொரு பிரச்சினையை நாம் இப்பொழுது காண்போம். இப்போராட்டத்தில் அது எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது?
இந்தச் சித்தாந்தத்தை நாம் ஆய்வு செய்யும்பொழுது நாம் காண்பதென்ன? அனைத்தையும் காண்கிறோம். அது, ஒரு கதம்பக் கூட்டு. ஒரு வெறித்தனமான தேசியவாதத் தத்துவம் என்பது அனைத்து இடங்களிலும் அனைத்துப் பாசிச இயக்கங்களுக்கும் ஒரு பொதுவான அம்சமாகும். இத்தாலியைக் குறித்து மிக அதிகமாகப் பேச வேண்டிய தேவை இல்லை. இந்த அம்சம் ஜெர்மனியில் இதைவிட பலமானது. ஏனென்றால், ஜெர்மனி யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட நாடு. மேலும் அங்கு தேசியவாத அம்சம் மக்களைத் திரட்டுவதற்கு எதையும் செய்யத் தயாராக உள்ளது என்பதாகும்.
இந்த அம்சம் ஒருபுறமிருக்க, இதர மூலங்களிலிருந்து பெறப்பட்ட ஏராளமான கூறுகளும் உள்ளன. இத்தகைய மூலங்களுக்கு உதாரணமாகச் சொல்வதென்றால் சமூக ஜனநாயகத்தைக் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக வர்க்கக் கூட்டு என்ற கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டுள்ள கூட்டாண்மைத் தத்துவமானது பாசிசம் கண்டுபிடித்ததல்ல. மாறாக அது சமூக ஜனநாயகம் கண்டுபிடித்ததாகும். ஆனால், சமூக ஜனநாயகத்திலிருந்து வராத வேறு அம்சங்களும் இன்னும் அங்கே உள்ளன.