பெண்ணுலகம் கவிதையில் கை வைத்த பின்புதான் அவர்களின் முழு உலகம் வெளிப்பட ஆரம்பித்தது. அதுவரை அரைவாசிதான். அவர்கள், ஆதியில் மிகச்சிலரே என்றாலும், தவிர்க்க முடியாத பதிவுகளைத் துணிவுடன் முன்வைத்தனர். உமா மோகன் தமது இரண்டாவது தொகுதியுடன் பிரவேசிக்கிறார், வாழையடி வாழைபென வந்த திருக்கூட்ட மரபில் யானும் ஒருத்தியன்றோ என்றபடி. இவரது கவிதைகளில், பாரதி, பாவேந்தர் மூச்சுக் காற்று படிந்துள்ளது. கால்களில் இந்த மகாகவிகள் மிதித்து புழுதி மண், புதுவை எனும் பூஞ்சோலையின் மண் மகளாய், இரண்டாவது பூக்கடை ஏந்தி, இவரது கவிதைகள் கார்ப்பரேட், கணினி யுகச் சூறாவளிக்கு நடுவேயும் அடக்கமான இனிய வாழ்க்கை உண்டு என்பதைக் காட்சிப்படுத்தும் வண்ணக் கவிதைகள். பின்னுக்குத் தள்ளப்பட்ட வரலாற்றையும், நிகழ்கால அவலத்தை உணர்த்தவும் பேசவும் செய்யும் மனித நேயக் கவிதைகள். “தொடங்கிவிட்டிருக்கிறது அடுத்த வட்டம்' என்ற இவரது கவிதையின் தொடர், ஒரு குறியீடாகவே எனக்குப் புலப்படுகிறது. தொடங்குங்கள், தொடருங்கள் என அழைக்கிறேன் கவிஞர் உமாமோகன் அவர்களை. வரவேற்பும், வாழ்த்துகளும்.