துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்நூலாசிரியர், கண்ணதாசன் பத்திரிகை முதல் ஆனந்த விகடன் வரை பல பத்திரிகைகளில் தனது படைப்புகளைப் பதிவு செய்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் சமூக, பொருளாதார, அரசியல் நிலை குறித்து இந்தியா சந்தித்த பல பிரச்னைகளை விமர்சனப் பார்வையுடன் இந்நூலில் எழுதியுள்ளார். குறிப்பாக, மார்க்ஸியம், தலித்தியம், பெண்ணியம், காந்தியம், திராவிடம், ஹிந்துத்வா, மதச்சார்பின்மை, இந்திய ஜனநாயகம், தீண்டாமை போன்ற பல விஷயங்கள் இதில் அலசப்பட்டுள்ளன. சில சமயம் மார்க்ஸியக் கருத்துக்களுக்குச் சார்பாகவும்,சில சமயம் ஹிந்துத்வாவுக்குச் சார்பாகவும் இவரது கருத்துக்கள் தொனித்தாலும், இவர் இன்ன சார்புடையவர் என்று தீர்மானிக்க முடியாதபடியும் தெரிகிறார். இந்திய அரசியல் எந்தெந்தக் காலகட்டத்தில் எந்தெந்த சமயத்தைச் சார்ந்து இருந்தது என்பதை அசோகர் காலத்திலிருந்து அலசுகிறார். 1947க்குப் பிறகு இந்தியா ஹிந்து சமயச் சார்பாக ஆனது இயல்பானதே என்றும், ஆனால் மதச்சார்பின்மை பேசும் அனைத்துக் கட்சிகளுமே மதச் சிறுபான்மையினரை ஏமாற்றும் கபடமான எண்ணம் கொண்டவையே என்றும் விமர்சிக்கிறார். அதற்கு பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு நடந்த பல சம்பவங்களை ஆதாரமாகச் சுட்டிக்காட்டுகிறார். இப்படி இந்நூலில் உள்ள எல்லா கட்டுரைகளிலும் தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். -பரக்கத். நன்றி: துக்ளக், 28/8/2013.